மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகளை வரையறுக்கும் நோக்கில் விரிவான பகுப்பாய்வைத் தொடங்கி
இருக்கிறது ஆஸ்திரேலிய அரசாங்கம்.
அந்த வகையில், கிருமித்தொற்றுக்கு ஆளான ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று தற்காப்பு படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தொற்றுக்கு ஆளானவர்களில் நான்கில் ஒருவர் அங்கு இல்லாதது தெரிய வந்தது.
அவர்களைப் பற்றிய விவரங்களை போலிசாரிடம் தெரிவித்துள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு 1,652 ஆஸ்திரேலிய டாலர் (S$ 1,626) அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அம்மாநில தலைவர் ஆண்ட்ரூஸ் கூறினார்.
இதுபற்றி பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “மெல்பர்னில் கிருமித்தொற்றின் சமூகப் பரவல் தொடர்ந்து சவாலாக இருக்கிறது. அங்கு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது,” என்றார். அதோடு சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்சில் கிருமிப் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
“நியூ சவுத் வேல்சில் பதிவாகும் ஒவ்வொரு கிருமித்தொற்று சம்பவமும் எங்கிருந்து தொடங்கியது என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் விக்டோரியாவில் பதிவாகும் சம்பவங்களில் ஒவ்வோர் நாளும் கிட்டத்தட்ட 50 சம்பவங்கள் எப்படி தொற்றியது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளன,” என்றும் அவர் சொன்னார்.
நேற்று விக்டோரியாவில் 627 சம்பவங்களும் நியூ சவுத் வேல்சில் 14 சம்பவங்களும் பதிவாகின. ஆஸ்திரேலியாவில் இதுவரை 16,900 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 60 விழுக்காட்டினர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோல் 198 உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை விக்டோரியாவில் நிகழ்ந்தவை.