கொவிட்-19 ஏற்படுத்தும் விளைவுகள் அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதன் பாதிப்புகளை உணர முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானாம் எச்சரித்துள்ளார்.
நூறு ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடியை கிருமிப் பரவல் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் வூஹான் நகரில் முதலில் தென்பட்ட கொவிட்-19 கிருமி, பின்னர் உலகம் முழுவதும் பரவி 679,000 மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிவிட்டது. ஏறக்குறைய 17.6 மில்லியன் மக்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவும் கிருமியால் அந்நாட்டு அரசாங்கங்கள் திணறி வருகின்றன.
இந்தியாவிலும் கொவிட்-19 மரணங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த முடக்கம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன.
ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் எல்லைகளுக்கு இடையிலான போக்குவரத்து, சுற்றுப்பயணம், வர்த்தகம் போன்றவற்றை பாதிக்கச் செய்து உலகப் பொருளியலை அடிமட்டத்துக்குத் தள்ளியுள்ளது.
இந்த நிலையில் கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றன.
இருந்தாலும் 2021ஆம் ஆண்டு முற்பகுதிக்குள் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைப்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.
கிருமிப்பரவல் பற்றிய பின்னணி விவரங்களை அறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னமும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்கிறார் திரு டெட்ரோஸ் அதானாம்.