சோல்: தென்கொரியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வெள்ளத்தில் 13 பேர் மாண்டதாகவும் மேலும் 13 பேரைக் காணவில்லை என்றும் மத்திய பேரிடர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தலைமையகம் நேற்று தெரிவித்தது. பருவநிலை மாற்றத்தால் வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
நிலச்சரிவு, வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவங்களால் மரணம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சோல் நகரில் உள்ள முக்கியமான பெருவிரைவுச் சாலையின் ஒரு பகுதியும் 5.75 ஹெக்டேர் (14,211 ஏக்கர்) பரப்பளவுள்ள ஒரு பண்ணையும் வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்த 13 பேரில் ஆறு பேர் கெயோங்கி வட்டாரத்தின் மலைப்பகுதியில் உள்ள தற்காலிகக் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது. காணாமல் போன 13 பேரில் 60 வயது ஆடவர் ஒருவர் வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என நம்பப்படுகிறது.
இது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். தேசிய மற்றும் வட்டார அளவில் உள்ள அதிகாரிகளை மேலும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் முழுமூச்சாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.
சோல் நகரின் நடுப் பகுதியில் ஓடும் ஹான் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளும் போக்குவரத்து கட்டமைப்பும் பெரும் அளவில் சேதமடைந்துள்ளன.
அவற்றை அப்புறப்படுத்தி சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வெள்ளத்தால் சேதமடைந்தவற்றை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர், தொண்டூழியர்கள் என 25,000க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் ஊடகம் எச்சரித்துள்ளது. வடகொரியாவிலும் பல இடங்களில் கனமழை பெய்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியா, தனது எல்லையில் உள்ள அணையைத் திறந்துவிட்டதாகவும் அதுகுறித்து தென்கொரியாவுக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும் பெயர் வெளியிடப்படாத வடகொரிய அரசாங்க வட்டாரம் தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.