ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஐஎஸ்எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்று நங்கர்ஹர்ம்ாவட்ட ஆளுநர் அலுவலகத்தின் பேச்சாளர் திரு அட்டாவுல்லா குகியானி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினருக்கும் சிறைக் கைதிகளுக்கும் இடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் ஐஎஸ்எஸ், தலிபான் தீவிரவாதிகள் மற்றும் உள்ளூர் குற்றவாளிகள் சிலரும் ஈடுபட்டதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிறையில் இருந்த கைதிகளில் பெரும்பாலானோர் தப்பித்து ஓடினர்.
அவர்களில் 1,025 பேரை பாதுகாப்புப் படையினர் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். 335 பேரைக் காணவில்லை. அவர்கள் தப்பியோடி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தாக்குதலில் சிறைக்கைதிகள், பாதுகாப்புப் படையைச் சேர்ந்தோருடன் பொதுமக்களில் சிலரும் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் சிறைச்சாலையின் முகப்பில் ஒரு காரை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிக்காரர்கள் சரமாரியாக சுட்டனர்.
இதில் ஏறக்குறைய 30 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஆப்கானிஸ்தானின் சட்டமன்ற உறுப்பினர் சோஹ்ரப் கதாரி கூறினார். இப்போது அந்த நகரில் ஊரடங்கு விதிக்கப்பட்டு சிறப்புப் போலிஸ் படை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.