சீனாவில் வீசெட் செயலியின் பயன்பாடு மிக விரிவாக உள்ளது. உரையாடுவது, பொருள் வாங்குவது, படங்களைப் பகிர்வது, செய்திகளைப் பெறுவது, பணம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இணைய தணிக்கை சீனாவில் மிக கடுமையாக உள்ளது. சீனாவை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும் வெகு சில செயலிகளில் இதுவும் ஒன்று.
வெளிநாடுகளில் படிக்கும் சீன மாணவர்களும் குடியேறிகளும் வீட்டிலுள்ளோரிடம் இதன் மூலமாக உரையாடுவர். காணொளிகள், ‘மீம்’ படங்கள் ஆகியவற்றை வெளிநாட்டுவாழ் சீனர்கள் இதன் மூலமாக பகிர்வது வழக்கம். இந்தச் செயலியை அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் கூகல் இணைய பதிவிறக்கத் தளத்திலிருந்து அகற்றக் கோரும் உத்தரவை திரு டிரம்ப் கடந்த வியாழக்கிழமை பிறப்பித்தார்.
நாற்பத்தைந்து நாட்களில் தொடங்கும் இந்தத்தடையால் 1.2 பில்லியன் பேர் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக் டாக் செயலிக்கு எதிரான தடையை திரு டிம்ப், இந்தத் தடையுடன் அறிவித்திருந்தார்.
சீனாவில் டிக் டாக் செயலியைக் காட்டிலும் வீசெட் செயலி முக்கியமானவை. சீனாவிலுள்ள இந்தச் செயலி, அந்நாட்டின் இணைய போலிசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வீசெட் செயலியில் இந்திய பயனீட்டாளர்கள் செய்திகளை அனுப்பவோ பெறவோ அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது. இது இந்தியாவில் பணியாற்றும் சீனர்களையும் வெகுவாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. “டிக் டாக்கின் தடையால் எங்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை,” என்று குருகிராமில் பணியாற்றும் சீன நாட்டவர் தெரிவித்தார். “ஆனால் வர்த்தகப் பயன்பாடுகளுக்காக நாங்கள் வீசெட் பயன்படுத்துவதால் இந்தத் தடை எங்களைப் பெரிதும் பாதித்துள்ளது,” என்றும் அவர் கூறினார். இதுவரை சீனாவின் 59 செயலிகளைத் தடை செய்திருக்கும் இந்தியா, மேலும் பல செயலிகளை முடக்கப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.