சிட்னி: ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகமுள்ள விக்டோரியா மாநிலத்தில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்து வருகின்றன.
நேற்று புதிதாக 466 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 12 கொவிட்-19 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
புதிய தொற்று சம்பவங்கள் ஓரளவு நிலைப்பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விக்டோரியாவில் கடந்த சில வாரங்களாக கிருமிப் பரவல் கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மெல்பர்ன் நகரம் ஆறு வார காலத்துக்கு முடக்கப்பட்டது. கிருமித் தொற்றியவர்கள் அனுமதி யின்றி வெளியேறினால் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்த உத்தர விடப்பட்டது.
இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து கிருமிப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் பாதிக்கப்பட்ட 21,000 பேரில் மூன்றில் இரண்டு பங்கு விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்பர்ன் நகரில் மட்டும் 181 பேர் கிருமிப் பாதிப்பில் இறந்து விட்டனர்.
இது, ஆஸ்திரேலியாவில் கிருமித் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 70 விழுக்காடாகும்.
கடந்த வாரம் விக்டோரியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை தற்போது சரிந்துள்ளது.

