சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தொற்றுக்கு ஆளானது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதாக அம்மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.
விக்டோரியாவில் நேற்று புதிதாக 394 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். அது முந்தைய வாரத்தின் அன்றாட சராசரியான 400-500ஐவிட சற்று குறைவாகும்.
என்றாலும் தொற்றுக்கு ஆளானவர்களில் 174 பேருக்குக் கிருமி தொற்றியது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது.
இது முன்னைய நாள் எண்ணிக்கையான 130ஐவிட அதிகம். மர்மமான முறையில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை விக்டோரியாவில் தற்போது 2,758ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர மேலும் 17 பேர் மாண்டதையடுத்து அம்மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 210 ஆகியது.
விக்டோரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருந்தாலும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரவு நேர முடக்கம், அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடல் போன்ற கடுமையான கட்டுப்பாட்டுகளால் கிருமிப் பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், சிலர் எப்படி கிருமித்தொற்றுக்கு ஆளாகினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பதால், நிலைமை தொடர்ந்து சவாலாகவே இருப்பதாக விக்டோரியா முதல்வர் ஆண்ட்ரூஸ் கூறினார்.
மேலும் பேசிய அவர், “விக்டோரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம், குறைந்தது ஒருவர் தொற்றுக்கு ஆளாகிறார்.
“இதை குறைக்க வேண்டும். அதாவது ஒவ்வோர் மூன்றாவது அல்லது நான்காவது நபருக்கு இன்னொருவர் தொற்றுக்கு ஆளாகும் வகையில் நிலைமை மேம்படும்போதுதான் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பாதியாக குறையும். அதற்கு சற்று காலம் எடுக்கும்,” என்று சொன்னார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று 10 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
விக்டோரியாவில் பாதிக்கப்படுவோர் குறைவு, உயிரிழப்போர் அதிகம்