நெவாடா, அமெரிக்கா: நீரோட்டத்தால் இழுக்கப்பட்ட மூன்று பிள்ளைகளைக் காப்பாற்ற முயன்ற 29 வயது இந்திய ஆடவர், நீருக்குள் மூழ்கி மாண்டார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கிங்ஸ் ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைகளைக் கண்ட மன்ஜித் சிங், உடனே நீருக்குள் குதிக்க முற்பட்டார். திரு சிங்கிற்கு ஏற்கெனவே நீச்சல் தெரியுமா என்பது தெளிவாக இல்லை. ஆகஸ்ட் 7ஆம் தேதி திரு சிங், தமது மைத்துனருடன் ஆற்றங்கரை அருகே காணப்பட்டதாக அமெரிக்க ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீருக்குள் குதித்த திரு சிங், திரும்பவே இல்லை. ஆயினும், அந்தப் பிள்ளைகளைக் கண்ட வேறு சிலர் அவர்களைக் காப்பாற்றினர்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு திரு சிங்கின் உடல், ஆற்றோரத்தில் இருந்த புதருக்கருகே கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த திரு சிங், தமது குடும்பத்திற்காகச் சம்பாதிக்கும் குடும்பத்தலைவர் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவருக்கான நிதித்திரட்டு இயக்கம் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.