ஹாங்காங்: ஹாங்காங் ஊடகத் துறை அதிபர் ஜிம்மி லாய் (படம்) வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆப்பிள் டெய்லி நாளிதழ் மற்றும் நெக்ஸ்ட் சஞ்சிகையின் உரிமையாளரான 71 வயது ஜிம்மி லாய் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் சீனாவின் சர்வாதிகார ஆட்சியை தொடர்ந்தும் விமர்சித்து வந்தார். ஹாங்காங் மக்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருந்தார். தன்னை ஒரு பிரச்சினைக்குரிய நபர் என சீனா கருதுவதாகவும் சிறைக்குச் செல்ல தான் தயாராக இருப்பதாகவும் அவர் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.