தைப்பே: தைவானை மற்றொரு ஹாங்காங்காக மாற்ற சீனா முயல்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அமைச்சரிடம் தைவானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்படி ஜனநாயக தைவானை சீனா நெருக்கி வருவதால் தைவானின் நிலவரம் மிகவும் சிரமமாகி வருகிறது என்று அவர் அமெரிக்க அமைச்சரிடம் கூறினார்.
அமெரிக்காவின் சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அஸார் ஞாயிற்றுக்கிழமை தைவான் சென்றார். 40 ஆண்டுகளில் இல்லாதபடி ஆக உயரிய அமெரிக்க அதிகாரி அங்கு முதன்முதலாக இப்போது சென்றிருப்பதை சீனா கண்டித்தது.
ஹாங்காங்கில் கடுமையான சட்டத்தை அமல்படுத்திய சீனா, ஊடகத் தலைவரான ஜிம்மி லாய் என்பவரை கைது செய்துள்ள நிலையில், அமெரிக்க அமைச்சரின் தைவான் பயணம் இடம்பெறுகிறது.
“தைவானின் நிலைமை சிரமமாகி வருகிறது. தன்னுடைய அரசியல் நிலவரங்களை ஏற்றுக்கொள்ளும்படி சீனா தொடர்ந்து தைவானை நெருக்கி வருகிறது.
“அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் தைவானும் மற்றொரு ஹாங்காங்காக மாறிவிடும்,” என்று தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் ஊ, தைப்பேயில் அமெரிக்க அமைச்சருடன் கலந்துகொண்ட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தைவானை தன் மாநிலமாக சீனா கருதுகிறது. தைவானுக்கு தன்னாட்சி அதிகார பாணியிலான ‘ஒரு நாடு, இரண்டு முறைகள்’ என்ற ஓர் ஏற்பாட்டை சீனா யோசனையாக முன்வைத்து இருக்கிறது.
ஆனால் அதை தைவானின் முக்கியமான அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் நிராகரித்துள்ளன.
தைவானின் ஜனநாயகத்திற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவிப்பதோடு மட்டுமின்றி கொவிட்-19 கிருமியை வெற்றிகரமான முறையில் தைவான் சமாளித்து இருப்பது பற்றி தெரிந்துகொள்வதற்காகவும் அமெரிக்க அமைச்சர் தைவான் பயணம் மேற்கொண்டார்.