வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதத்துடன் இருந்த ஆடவர் ஒருவரை அதிபரின் காவல் படையினர் சுட்டு காயப்படுத்தினர். அதனையடுத்து அதிபர் டிரம்ப் செய்தியாளர் கூட்டத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
வெள்ளை மாளிகை வளாகத்தில் இருந்து சிறிது தொலைவில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்த டிரம்ப், சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தார். "துப்பாக்கிச் சூடு நடந்தது, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
"சட்ட அமலாக்கத்துறையினர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுடப்பட்ட தனிநபர் ஆயுதங்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்தான் சுடப்பட்டார்," என்று அதிபர் தெரிவித்தார்.
பென்சில்வேனியா அவென்யூவின் 17வது தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. வெள்ளைமாளிகையிலிருந்து இது சிறிது தூரத்தில்தான் உள்ளது.
ஆயுதத்துடன் வந்த நபரின் நோக்கம் என்ன என்பதைச் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

