இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதிபர் கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான நிர்வாகத்தில் அவரது அண்ணனும் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே பிரதமராகக் கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர்களது பதவிப் பிரமாண விழா, இலங்கையின் பிரபல புத்த ஆலயமான தலதா மாளிகையில் நடைபெற்றது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதித்துறை, நகர சீரமைப்பு, பௌத்த விவகாரங்கள் ஆகிய அமைச்சுகளுக்கு மஹிந்த ராஜபக்சே பொறுப்பேற்றார். அத்துடன் அவரது அண்ணன் சமால் ராஜபக்சே நீர்ப்பாசன அமைச்சராகவும் மகன் நமல் ராஜபக்சே விளையாட்டு, இளையர் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
இம்மாதம் ஐந்தாம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 நாடாளுமன்ற இடங்களை வென்று பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன.
திரு மஹிந்த ராஜபக்சேயின் உறவினர் மகனான சசீந்திர ராஜபக்சே, அமைச்சரவையில் இல்லாத பொறுப்பான வேளாண்மை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குகளை வென்ற இவர்கள், அரசமைப்புச் சட்டங்களை மாற்றுவதற்கு அதிகாரம் உள்ளது.