கோலாலம்பூர்: மலேசியாவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா திகழ்கிறது.
இருந்தாலும் தென் சீனக் கடற் பரப்பு முழுவதும் சொந்தம் கொண்டாடும் சீனாவுக்கு மலேசியா திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பு தனக்குள்ள உரிமையை நிலை நாட்டும் வகையில் ஐநாவிடம் மலேசியா கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மலேசிய எல்லையிலிருந்து 200 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சில பகுதிகள் மலேசியாவுக்குச் சொந்தம் என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
டிசம்பர் 12ஆம் தேதி தென் சீனக் கடற்பரப்பின் பெரும்பகுதி தங்களுக்கே சொந்தம் என்று சீனா முன்வைத்துள்ள கோரிக்கையே போன்று மலேசியாவும் தனது கோரிக்கையை சமர்ப்பித்து உள்ளது.
"கடற்பரப்பு மீது வரலாற்றுப்பூர்வ உரிமை இருக்கிறது என்று சீனா கூறுவதை எதிர்க்கிறோம். தென்சீனக் கடலில் உள்ள வளங் களுக்கும் சீனா உரிமை கொண்டாடுவதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை," என்று திரு ஹிஷாமுதீன் குறிப்பிட்டார்.
வியட்னாம், பிலிப்பீன்ஸ், புருணை, மலேசியா, தைவான் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட 1.4 மில்லியன் சதுர மைல் கடற்பரப்பில் 80 விழுக்காடு தனக்குச் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது.
இதற்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மலேசியா இதுவரை நேரடியாக சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சீனாவுடன் பதற்றத்தை ஏற்படுத்தாமல் தனக்குள்ள உரிமையை மிகவும் எச்சரிக்கையாக மலேசியா தற்காத்துச் செயல்படும் என்று அமைச்சர் ஹிஷாமுதீன் கூறியுள்ளார்.

