மன்னார்குடி: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதை தமிழகத்தில் உள்ள அவரது பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்திலுள்ள துளசேந்திரபுரத்தில் பிறந்து வளர்ந்த கோபாலன்-ராஜம் தம்பதியரின் பேத்திதான் கமலா ஹாரிஸ், 55.
மேலும் தம்பதியரின் இரு மகள்களில் ஒருவரான சியாமளா கோபாலனின் மகள் இவர். கடந்த ஆண்டு கமலா வெளியிட்ட நூலில் தமது தாத்தா பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். தமது முன்னேற்றத்துக்கு அவரே ஊக்கசக்தி என்றும் கமலா புகழ்ந்துரைத்து இருந்தார். 1991ஆம் ஆண்டு தாத்தா கோபாலனின் 80வது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடியதாகவும் அந்நிகழ்வில் தமது குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்றுகூடி இருந்ததாகவும் நினைவலைகளை தமது நூலில் கமலா பகிர்ந்திருந்தார்.
தமது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வாரிசு அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை அறிந்ததும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
2014ஆம் ஆண்டு அந்தக் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா அய்யனார் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றபோது கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் அதற்கு நன்கொடை அளித்து சிறப்பித்ததாக கோவிலை நிர்வகிக்கும் ரமணன் தமிழக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதனால் குடமுழுக்கு கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர் பொறிக்கப்பட்டு காட்டியதோடு இது கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குலதெய்வம் என்றும் அவர் கூறினார். அவர் தேர்தலில் போட்டியிடுவதையொட்டி குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கிராமத்தினர் கூறினர்.