ரஷ்யாவிடம் தடுப்பூசி வாங்கும் வியட்னாம்
ஹனோய்: ரஷ்யாவிடமிருந்து கொவிட்-19 தடுப்பூசியை வியட்னாம் சுகாதார அமைச்சு வாங்கவிருப்பதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இடைப்பட்ட வேளையில், தானே சொந்தமாக கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியை வியட்னாம் தொடரவிருக்கிறது. அங்கு இதுவரை 911 பேரை கொரோனா தொற்றிவிட்டது. அதனால் 21 பேர் மாண்டுவிட்டனர்.
தலிபான் கைதிகள் 400 பேர் விடுவிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டுள்ள கடைசி 400 தலிபான் கைதிகளை விடுவிக்கும் பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக நேற்று முன்தினம் 80 பேர் விடுவிக்கப் பட்டனர். இதையடுத்து, அரசாங்கத்திற்கும் தலிபானுக்கும் இடையே விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரை மாற்றிய கிம் ஜோங் உன்
பியோங்யாங்: பொருளியல் சூழல் மோசமாக இருந்து வரும் நிலையில், வடகொரியா இப்போது வெள்ளத்திலும் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், ஓராண்டுக்குமுன் தான் பிரதமராக நியமித்த கிம் கே ரயோங்கை பதவிநீக்கம் செய்து, கிம் டோக் ஹுன் என்பவரை பிரதமராக நியமித்துள்ளார் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். கொரோனா அபாயம் காரணமாக வெளிநாட்டு உதவிகளை அந்நாடு ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.