சாண்டியாகோ: லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொவிட்-19 கிருமி தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில், பெரு, சிலி உள்ளிட்ட நாடுகளில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 6 மில்லியனைக் கடந்துவிட்டது. 237,360 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
உலகப் பாதிப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவரும் நிலையில் அங்கு கிருமித்தொற்று அதிகமாகி வருகிறது.
இதனிடையே, நேற்று மதிய நிலவரப்படி உலகம் முழுவதிலும் கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 21 மில்லியனுக்கும் அதிகம். குணமடைந்தோர் ஏறக்குறைய 14.1 மில்லியன் பேர்.
பலியானோர் எண்ணிக்கை 763,539 ஆக இருந்தது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அதிகம் பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் உள்ளன.
இதனிடையே, கொவிட்-19 கிருமி பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
தென்கொரியாவில் கிருமித் தொற்று ஐந்து மாத காலத்தில் இல்லாத அளவுக்கு அதிகமானதை அடுத்து சோல் நகரின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு இடைவெளி நிபந்தனையை நிர்வாகம் கடுமையாக்கியது.
அந்த நாட்டில் ஒரே நாளில் 166 பேர் பாதிக்கப்பட்டனர். தலைநகரைச் சுற்றிலும் தலைநகரிலும் அபாயச் சங்கு ஊதும் அளவுக்குத் தொற்று பெருகி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வேளையில் நியூசிலாந்தில் நேற்று ஏழு பேருக்கு கொவிட்-19 தொற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் ஆகப்பெரிய நகரான ஆக்லாந்தில் முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
ஐரோப்பாவிலும் கொரோனா மீண்டும் வேகமாக தலை எடுப்பதால் புதிய அச்சம் கிளம்பிவருகிறது. பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளில் தொற்று அதிகமாக பரவுவதால் அங்கு விடுமுறை நிமித்தம் சென்ற ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் மக்கள் பரபரப்பாக நாடு திரும்புகிறார்கள்.
அந்த நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோருக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் பலரும் உடனடியாக திரும்புகிறார்கள். ஜப்பான் தலை நகர் தோக்கியோவில் புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 2வது நாளாக நேற்று 300க்கும் அதிகமாக இருந்தது.

