மணிலா: பிலிப்பீன்சில் வெளிநாட்டினர் பலரைக் கடத்திச் சென்று தலையைத் துண்டித்ததாகக் கூறப்படும் அபு சாயஃப் அமைப்பின் உறுப்பினர் இடாங் சுசுகான் கைதாகி இருப்பதை அடுத்து பதிலடித் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்பதால் அந்த நாட்டில் பாதுகாப்புப் படைகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அந்தப் பயங்கரவாதி மீது 23 கொலைக் குற்றச்சாட்டுகள் ஐந்து ஆட்கடத்தல் மற்றும் ஆறு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக போலிஸ் கூறியது.
இதனிடையே, சுசுகான் பிடிபட்டதை அடுத்து பிலிப்பீன்ஸ் போலிசுடன் சேர்ந்து செயல்பட்டு பல தகவல்களைத் தெரிந்துகொள்ள மலேசியப் போலிஸ் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் சாபா மாநிலத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல் சம்பவங்களில் அந்தப் பயங்கரவாதிக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாக சாபா மாநில பாதுகாப்புத் தளபத்தியத்தின் தளபதி ஹசானி கசாலி தெரிவித்தார்.
அதன் தொடர்பில் தங்கள் வேவுத்துறை திரட்டி உள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்டு மேல் விவரங்களைப் பெறும் வகையில் பிலிப்பீன்ஸ் போலிசுடன் தொடர்பு கொள்ளப்போவதாக அவர் கூறினார்.

