மணிலா: கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த மாதக்கணக்கில் முடக்கநிலை நீடிப்ப தால் பிலிப்பீன்ஸில் உள்ள ஜீப்னி வாகன ஓட்டுநர்கள் வருமானமின்றி வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்கி இருக்குமாறு மார்ச் மாதம் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துச் சேவை அடியோடு முடங்கியது.
ஜீப்னி எனப்படும் சிற்றுந்துப் பயணமும் நடைபெறவில்லை. அதனால் ஏராளமான ஜீப்னி ஓட்டுநர்கள் வேலை, வருமானம் ஆகியவை இன்றி சிரமத்தில் தவிப்பதாக ஏஎஃப்பி செய்தி குறிப்பிட்டது. அவர்களில் ஒருவரான 23 வயது டேனியல் ஃப்ளோர்ஸ் தமது முதலாளி இரக்கப்பட்டு கொடுத்து உதவிய ஜீப்னி சிற்றுந்திலேயே தமது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் குடியிருந்து வந்த அடுக்குமாடி வீட்டுக்குப் பல மாதங்களாக வாடகை செலுத்தாததால் அதைவிட்டு வெளியேற வேண்டிய நிலை அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டது.
அதன் பின்னர் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் தமது வாகனத்துக்குள் குடியேறிய டேனியல் குடும்பத்தினர் சமைப்பது, தூங்குவது என எல்லாம் அந்த வாகனத்துக்குள்தான்.
இவரைப்போன்ற மற்ற ஓட்டுநர்கள் தங்களது நிலைமையை விளக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கழுத்தில் தொங்கவிட்டு சாலையில் போவோர் வருவோரிடம் பிச்சை கேட்டு வயிற்றுப் பசியைப் போக்கி வருவதாகவும் ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது. இந்நிலையில், பிலிப்பீன்சில் நேற்று புதிதாக 3,420 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதோடு 65 பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

