சோல்: தென்கொரியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை மீண்டும் பெருகத் தொடங்கி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 103 பேராக இருந்த அந்த எண்ணிக்கை நேற்று இருமடங்கிற்கு மேல் அதிகரித்து 279 ஆகப் பதிவானது.
இவற்றில் பெரும்பாலான தொற்றுச் சம்பவங்கள் தலைநகர் சோல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவானவை. சோலில் மட்டும் 146 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 107 பேர் சாரங் ஜீல் எனப்படும் தேவாலயம் தொடர்பானவை.
அந்த தேவாலயத்தை வழிநடத்தும் ஜன் குவாங்-ஹூன் சர்ச்சைக்குரிய சமய போதகர் என்று கூறப்படுகிறது. சுய தனிமை தொடர்பான விதிகளை அவர் மீறியதாகவும் கிருமிப் பரவல் தொடர்பான விசாரணையை நடத்த விடாமல் தடுப்பதாகவும் அவர் மீது அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது. சுய தனிமை உத்தரவைப் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் பேரணி ஒன்றில் பங்கேற்றதால் அவர் மீது போலிசில் புகார் பதிவு செய்யப்படும் என்று தென்கொரிய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
தேவாலய நிகழ்ச்சிகளில் எத்தனை பேர் பங்கேற்றார்கள், அவர்களில் யார் யாருக்கு கிருமிப் பரிசோதனை நடத்தப்பட்டது, அவர்களின் தொடர்பு தடங்கள் என்ன என்பன போன்ற விவரங்களை திரு ஜன் தெரிவிக்க மறுப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

