சோல்: கிருமித்தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்டுள்ள தென்கொரியாவில் மார்ச் மாதத்திற்குப் பிறகு நேற்று ஆக அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது நாளாக அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய நிலவரப்படி 297 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 166 பேர் சராங் ஜெய்ஸ் தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள். இதையடுத்து, தேவாலயத்தோடு தொடர்புடைய கிருமித்தொற்று சம்பவங்கள் 623ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாவது அலையின் 90 விழுக்காட்டுத் தொற்று சம்பவங்கள், தலைநகர் சோல், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டறியப்பட்டவையாகும். எனவே இது 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெருநகரத்தில் கிருமி வேகமாகப் பரவுவது குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
"சோல் நகரில் வேகமாக பரவும் தொற்று நோயால், நாடு முழுவதும் கிருமி பரவும் அச்சுறுத்தல் நிறைந்த, மிக ஆபத்தான நெருக்கடியில் இருக்கிறோம்," என்று அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் கிம் கேங்-லிப் கூறினார்.
"தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தலால் மட்டுமே கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. தயவுசெய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்," என்றும் அவர் சொன்னார்.

