பேங்காக்: இரண்டாம் கட்ட கிருமிப் பரவலை தடுக்கும் நோக்கில் தாய்லாந்து அதன் தற்போதைய அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
மூன்று மாத காலமாக உள்ளூர்வாசிகளிடம் கிருமித்தொற்று காணப்படாதபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் இறுதி வரை அவசரநிலையை தாய்லாந்து நீட்டிக்க உள்ளது. அவ்வாறு நீட்டிக்கப்பட்டால் மார்ச் மாதத்திற்குப் பிந்திய ஐந்தாவது நீட்டிப்பாக அது இருக்கும்.
கொவிட்-19 நிலைமை நிர்வகிப்பு நிலையத்தில் வெளியுறவு அமைச்சின் துணை பேச்சாளர் நட்டன்பனு நோபாகுன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
"தற்போது வர்த்தகங்கள் பழையபடி திரும்பி நமது நடவடிக்கைகள் மீண்டு வழக்கமான கட்டத் தில் இருக்கிறோம்.
"இரண்டாம் கட்டமாக கிருமிப் பரவல் ஏற்பட்டால் அதனை நம்மால் தாங்க இயலாது," என்றார் அவர். தாய்லாந்தில் இதுவரை 3,390 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்பட்டதைப்போல கிருமித்தொற்று மீண்டும் ஏற்படாதிருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாய்லாந்து அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேநேரம், ஆசியானின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான தாய்லாந்து 12.2 விழுக்காடு சுருங்கிய பொருளியலையும் சீர்ப்படுத்த வேண்டி உள்ளது. அதன் காரணமாக அடுத்த மாதம் உள்ளூர் காற்பந்து லீக் ஆட்டங்களை நடத்த அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

