கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்று புதிய கொரோனா கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ளது. அந்தக் குழுமத்தில் மூவருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் பணிபுரிந்த 26, 27 வயதுகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கோலாலம்பூர் உணவகங்களில் பணிபுரிவோரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது இவ்விருவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்தக் கடையின் வாடிக்கையாளரான 42 வயது மலேசிய பெண்ணுக்கும் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இம்மாதம் 17ஆம் தேதி முதல் தலைவலி, தொண்டைவலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்மணி சுங்கை புலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த உணவகம் அமைந்திருக்கும் பகுதியான டிட்டிவாங்ஸாவின் பெயரே அந்தக் குழுமத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. அந்தக் குழுமத்தின் தொடர்பில் 672 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் ஊழியர்கள்; எஞ்சியவர்கள் வாடிக்கையாளர்கள்.

