சோல்: தென்கொரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேயிருப்பதால், அதன் தலைநகரமான சோலில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது முதன்முறையாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்ற மே மாதம் பொது போக்குவரத்து மற்றும் டாக்சிகளில் செல்லும்போது மட்டும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தென்கொரிய அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அண்மைய வாரங்களாக தென்கொரியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் பெருகுவதால், நாட்டில் உயர்மட்ட சமூக பாதுகாப்பு இடைவெளி உத்தரவை நடை
முறைப்படுத்த வேண்டியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிருமிப் பரவல் இதோடு முடிவு பெறவில்லை என்றால், மூன்றாம் கட்ட கட்டுப்பாடாக சமூக பாதுகாப்பு இடைவெளியை நடை
முறைப்படுத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை," என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் தனது உயர்மட்ட உதவியாளர்களிடம் கூறினார்.
மூன்றாம் கட்ட கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தால், ஆசியாவின் நான்காவது பெரிய பொருளியல் நாடான தென்கொரியாவில் பள்ளிகள் மற்றும் வர்த்தகங்கள் மூடப்படும் நிலை ஏற்படும்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தென்கொரியாவில் 266 புதிய சம்பவங்கள் பதிவாகின. இது முந்திய நாள் எண்ணிக்கையான 397ஐ விட குறைவு என்றாலும் ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி பாதிக்கப்
படுவோர் எண்ணிக்கை மூன்று இலக்கங்களிலேயே தொடர்வது குறிப்பிடத்தக்கது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதன் முக்கியமான ஒன்றான, தொடர்பு தடமறிதலில் தென்கொரியா சிறப்பாக செயல்படுவதாக பரவலாக பாராட்டப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 20 விழுக்காட்டினரின் தொடர்புகளை தடமறிய முடியவில்லை என்று சுகாதார அமைச்சின் அதிகாரியான யூன் டே-ஹோ சொன்னார்.
"இந்த வாரம் நாம் கிருமித்தொற்றின் 'கிராப்' எனும் வரைபடநிரல் வளைவை தட்டையாக்க தவறிவிட்டால், நாடு முழுவதும் கிருமித்தொற்று பரவக்கூடிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்று யூன் கூறினார்.
தென்கொரியாவில் பதிவான அண்மைய சம்பவங்களில் 875 பேர் சோல் தேவாலயத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.

