கோலாலம்பூர்: கிருமிப் பரவலுக்கு எதிராக மலேசியா போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மீட்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்குமாறு மலேசியாவின் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
'நிலைமை இன்னும் கட்டுக் குள் வரும் வரை' கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என்று அமைச்சு முன்மொழிந்ததாக சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா கூறினார்.
எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிப்பு குறித்து தேசிய பாதுகாப்பு மன்றமும் பிரதமர் முகைதீன் யாசினும் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர்.
கடந்த ஜூன் மாதம் மீட்பு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைக்கு வந்த பிறகு, பள்ளிகள், வர்த்தகங்கள் செயல் படத் தொடங்கின. ஆனாலும் மக்கள் பெருமளவில் கூடுவதற்கு, வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கான தடை நீடிக்கிறது.

