வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அவர், "பிளாஸ்மா சிகிச்சைக்கு உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரேனா கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு இது," என்றார்.
அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வெளியிடுவதற்கு மருந்து அமைப்பு தடையாக இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன் சாடிய டிரம்ப், பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளித்ததற்காக நேற்று பாராட்டினார்.
தனது இந்த முடிவு குறித்து ஆதாரங்களை மேற்கோள்காட்டிவிளக்கம் அளித்துள்ள அமைப்பு, பிளாஸ்மா சிகிச்சை உயிரிழப்பு விகிதத்தைக் குறைக்கும் என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களுக்குள் பிளாஸ்மா சிகிக்சை அளிக்கப்பட்டால், அது நோயாளியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றது.
பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட சுமார் 20,000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முறை பாதுகாப்பானது என்று தீர்மானித்ததாகவும் அது கூறியது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்புதான் தனக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என டிரம்ப் நம்புவதாகக் கூறப்படுகின்றது.

