சோல்: மாணவர்கள், பள்ளி ஊழியர்களுக்குத் தொற்று ஏற்பட்டதைத்தொடர்ந்து, தென்கொரிய தலைநகர் சோலில் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகள் மூடப்பட்டன.
நாட்டின் பாதி மக்கள்தொகையைக் கொண்ட அந்நகரில் பல கிருமித்தொற்று குழுமங்கள் உருவெடுத்ததைத் தொடர்ந்து தென்கொரியாவில் பள்ளிகள் இணையம் வழி கற்பித்தலுக்கு மாறியுள்ளன.
தென்கொரியாவின் தொடர்பு தடமறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சை என்ற அணுகுமுறை உலகளாவிய மாதிரியாக கருதப்படுகிறது.
ஆனால் தற்போது கிருமித் தொற்று குழுமங்கள் பெருகியுள்ள நிலையில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தென்கொரியா போராடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று 280 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகின. பல வாரங்களாக 30 முதல் 40 தொற்று சம்பவங்கள் பதிவாகி வந்த நிலையில், தொடர்ந்து கடந்த 12 நாட்களாக மூன்று இலக்கத்திற்கு மேல் பதிவாகி வருகின்றன.
"இப்போதே கிருமித்தொற்றுக் கான வளைவு தட்டையாகிவிட்டது என்று அவசரப்பட்டு சொல்லிவிடக் கூடாது.
"கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரிப்பதற்கான ஆபத்து இன்னமும் உள்ளது," என்றார் கேசிடிசியின் துணை இயக்குநர் குவான் ஜுன்-வூக்.
மேலும் கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் மூன்று மடங்கு அதிகரித்ததாகவும், அதனால் வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 200 மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
எனவே சோல், இஞ்சியோன் நகரங்களிலும் கியோங்கி மாநிலத்தில் உள்ள பாலர் பள்ளிகள் மற்றும் பள்ளிகள் வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி வரை இணையம் வழி கற்பித்தலைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வரும் டிசம்பரில் உயர்நிலைப் பள்ளியின் இறுதியாண்டு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் இணையம் வழி கற்பித்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், கடுமையாக சமூக இடைவெளி நடைமுறைப்படுத்தப்படும் என்று தென்கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

