ஜெனிவா: கொரோனாவில் இருந்து குணமடைந்த இளையர் ஒருவர் நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் கிருமித்தொற்றுக்கு ஆளானதாக ஹாங்காங் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான், மறுதொற்று குறித்து அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சீனாவிலும் சிலர் மீண்டும் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகச் சொன்ன அவர், அவர்கள் முழுவதும் குணமடைந்த பிறகு மீண்டும் தொற்றுக்கு ஆளானார்களா அல்லது முதலில் ஏற்பட்ட தொற்றின் கிருமியே அவர்கள் உடலில் இன்னும் இருந்ததா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொற்றிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட 33 வயது ஆடவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டன் வழியாக ஸ்பெயினிலிருந்து ஹாங்காங் திரும்பிய போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மீண்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டஇருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக், கிருமித்தொற்று நிபுணர்களை மேற்கோள்காட்டி டச்சு தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல்முறை கிருமித்தொற்றுக்கு ஆளானபோது நோயாளியின் உடலில் உருவான நோய் எதிர்ப்பாற்றல், அதன் மற்றொரு திரிபான கிருமியின் தொற்றைத் தடுக்கப் போதுமானதாக இல்லை என்று கூறினார் பெல்ஜியத்தின் கிருமித் தொற்று நிபுணரான மார்க் வேன் ரேன்ஸ்ட்.

