ஜெனிவா: கொரோனா தொற்றின் பரவல் இன்னும் இருந்தாலும், தென்கிழக்காசியா மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிகளைத் தவிர, உலகளவில் தொற்றுக்கு ஆளாவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை மெதுவடையத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று வரை ராய்ட்டர்ஸ் கணக்கின்படி, உலகளவில் 23.65 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 811,895 பேர் மாண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான புதிய தொற்று சம்பவங்களும் 39,000 புதிய இறப்புகளும் பதிவாகியுள்ளன.
"இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது, தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையில் நான்கு விழுக்காடும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 12 விழுக்காடும் குறைவு," என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் புதிய சம்பவங்கள் 28 விழுக்காடும் உயிரிழப்புகள் 15 விழுக்காடும் பதிவாகின.
பெரும்பாலான சம்பவங்கள் இந்தியாவில் பதிவாகிறது என்றாலும் நேப்பாளத்திலும் கிருமித்தொற்று வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் புதிய சம்பவங்கள் 4 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றாலும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

