வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் கலவரம் பரவும் என்று துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.
"ஜோ பைடனால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்பதே நம்ப முடியாத உண்மை," என்று குடியரசுக் கட்சியின் மாநாட்டில் முக்கிய உரையாற்றிய பென்ஸ் குறிப்பிட்டார்.
"சட்டம் ஒழுங்கு, சட்ட ஒழுங்கற்ற நிலை ஆகியவற்றுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார். விஸ்கான்சின் மாநிலத்தில் கறுப்பின ஆடவர் ஒருவரை போலிசார் சுட்டதால் இரவு பகல் பாராமல் கலவரம் நடந்துவரும் சூழ்நிலையில் பென்சின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இனவாதம் இனப்பாகுபாடு இருப்பதாக ஜோ பைடன் குறிப்பிடுவதை சாடிய பென்ஸ், ஜோ பைடனின் கொள்கைகள் அமெரிக்க நகரங் களில் கலவரங்களுக்கு வழி வகுக்கும் என்றார்.

