தோக்கியோ: உடல்நலக் குறைவு காரணமாகப் பதவி விலகுவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே நேற்று அறிவித்தார்.
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, 65 வயதான அபே பெருங்குடல் அழற்சி நோய் காரணமாக மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தன்னால் வாழ முடியுமா என்று தெரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.
தான் தற்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பலனளிக்காததால், தனக்குக் கூடுதல் சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார். கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின்போது, பதவி விலகுவது குறித்து அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
வரும் குளிர்காலத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், அப்போது அரசியலில் வெற்றிடம் இருப்பதைத் தான் விரும்பவில்லை என்றும் அபே கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களில் மக்கள் தமக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அபே, நாடு இன்னும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும்போதும், வடகொரிய கடத்தல்காரர்கள் மற்றும் ரஷ்யாவுடனான தகராறு போன்ற பிற பிரச்சினைகளைச் சமாளிக்கும் நிலையிலும் ஒரு வருடம் முன்னதாகவே பதவி விலகியதற்காகவும் அவர் மன்னிப்பு கேட்டார்.
அடுத்த பிரதமரைத் தேர்ந்
தெடுக்கும் வரை தான் பிரதமராக நீடிப்பேன் என்றும் அவர் சொன்னார்.
புதிய பிரதமருக்கான தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காப்பு அமைச்சர் டாரோ கோனோ, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆகியோரில் ஒருவர் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் அவர் இரு முறை மருத்துவமனைக்கு சென்றுவந்ததை
யடுத்து, அவரது உடல் நலம் பற்றிய ஐயம் எழத் தொடங்கியது.
கடந்த 2007ஆம் ஆண்டிலும் நீண்டநாள் செரிமானப் பிரச்சினைக் காரணமாகவே அவர் பதவி விலகினார். நாட்டின் பொருளியலை மீட்க உறுதிபூண்டு 2012ஆம் ஆண்டில், மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் அபே.
50 ஆண்டுகளுக்கு முன்பு திரு அபேயின் உறவினர் ஐசாகு சாத்தோ பிரதமர் பதவி வகித்த நாட்களின் எண்ணிக்கையை, அபே கடந்த திங்கட்கிழமை முறியடித்தார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பிரதமராக உள்ள திரு அபே, கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கையாண்ட விதம், அவரது கட்சி உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு ஆகியவை அண்மையில் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து, மக்களின் ஆதரவு சற்று சரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அபேவின் பதவி விலகல் குறித்து முன்னதாகவே ஊடகங்களில் செய்தி வெளியானதை
யடுத்து, ஜப்பானியப் பங்குச் சந்தை சரிவை நோக்கித் திரும்பியது. நிக்கேய் குறியீடு, நாளின் தொடக்கத்தில் இருந்ததைவிட 2.1 விழுக்காடு குறைந்தது.

