வூஹான்: சீனாவில் உள்ள வூஹான் நகரில்தான் முதலில் கொவிட்-19 கிருமிப் பாதிப்பு ஏற்பட்டது. அங்கிருந்துதான் உலகம் முழுவதும் கிருமித்தொற்று பரவியது. இந்தச் சூழலில் அந்த நகரில் கிருமித்தொற்று அறவே இல்லாததால் பள்ளிகள் மற்றும் பாலர்பள்ளிகள் செவ்வாய்க் கிழமையிலிருந்து திறக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வூஹான் நகரம் முழுவதும் உள்ள ஏறக்குறைய 1.4 மில்லியன் மாணவர்கள் படிக்கும் சுமார் 2,842 கல்வி நிலையங்களின் கதவுகள் செவ்வாய்க்கிழமையிலிருந்து திறக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று கூறினர். வூஹான் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் இணைய வகுப்புகளுக்குத் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

