புத்ரஜெயா: பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான சாத்தியத்தை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அன்வர் மூசா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்குப் புதிய மற்றும் வலுவான ஆட்சி அமைய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
"எவ்வாறாயினும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் கொவிட் -19 தொற்றுநோயைச் சமாளிப்பதும் தான் எங்களின் இப்போதைய முன்னுரிமைகள் ஆகும்.
"நாங்கள் பொறுப்பான அரசாங்கமாக இருக்க விரும்புகிறோம். தேர்தலுக்கு அழைப்பு விடுத்து, அரசாங்கத்தைக் கலைக்கக்
கூடாது," என்று மூசா சொன்னார்.
பேராக்கில் நடந்த சிலிம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், வரவிருக்கும் சாபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
"14வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் கோலா காங்சர் மற்றும் சுங்கை பெசார் இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது நமக்குத் தெரியும்.
"அதற்குப் பிறகு பொதுத் தேர்தலில் நாம் எளிதில் வென்று விடுவோம் என்று மக்கள் நினைத்தார்கள், ஆனால் அப்படி நடக்கவில்லை.
"சாபா தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அங்குள்ள நிலைமையை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.
பேராக் மாநில ஸ்லிம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் முஹமட் சைய்டி அஸிஸ் 10,945 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, சாபா சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய முன்னணி இதேபோன்ற வெற்றியைப் பதிவு செய்யும் என அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி நம்பிக்கைத் தெரிவித்தார்.

