கெனோஷா: அமெரிக்காவின் விஸ்கான்சினின் கெனோஷா நகரில் சனிக்கிழமை நடந்த 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' அணிவகுப்பில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 29 வயது கறுப்பின ஆடவரான ஜேக்கப் பிளாக் என்பவர், வெள்ளைக்கார போலிஸ் ஒருவரால் ஏழு முறை சுடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் தூண்டப் பட்டன.
உயிர் தப்பிய பிளாக், மோசமாக காயமடைந்ததோடு இடுப்பிற்குக் கீழ் செயல் இழந்து போயுள்ளார். அவரால் மீண்டும் எழுந்து நடக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கு முந்திய குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த வாரம் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையில், மருத்துவமனையில் இருந்தபடியே, பிளாக் காணொளி மூலம் பங்கேற்பார் என்றும் அப்போது தான் குற்றவாளி அல்ல என அவர் கூறுவார் என்றும் வழக்கறிஞர் சொன்னார்.
இந்நிலையில் தன் மகனுக்காக நியாயம் கேட்டு நடந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட ஜேக்கப் பிளாக்கின் தந்தை, ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடல், காழ்ப்புணர்ச்சியைத் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமையன்று டிரம்ப் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் சூழப்பட்டுள்ள கெனோஷா நகருக்குச் செல்லவுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி கூறுகிறது.
அப்போது அவர் சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளைச் சந்தித்து வன்முறையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேட்டறிவார் என்றும் கூறப்படுகிறது.
காயமடைந்த ஜேக்கப் பிளாக்கின் குடும்பத்தை டிரம்ப் சந்திப்பாரா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விஸ்கான்சின் மாநிலத்தில் இரண்டு முறை வென்ற ஒபாமாவை, 2016ல் டிரம்ப் வெறும் 20,000 வாக்குகளில் வென்றார்.

