தென்கொரியாவில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கப் படை அதன் ராணுவப் பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ராணுவ வாகனம் ஒன்று நேற்று முன்தினம் விபத்தில் சிக்கியது. இதில் நான்கு தென்கொரியர்கள் மாண்டனர். தென்கொரிய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ராணுவ வாகனம் மீது கார் ஒன்று மோதியது. அமெரிக்கப் படையினரும் தென்கொரியப் படையினரும் பயன்படுத்தும் ராணுவப் பயிற்சி முகாமுக்கு ஏறத்தாழ 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
காரில் இருந்த நால்வரும் விபத்தின் காரணமாக உயிரிழந்தனர். ராணுவ வாகனத்தில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
“விபத்தில் மாண்ட தென்கொரியர்களின் குடும்பத்தாருக்கு அமெரிக்க-தென்கொரிய ராணுவப் படைகள் அவற்றின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றன.
இறந்தோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விபத்து நிகழ்ந்த வட்டாரத்தில் ராணுவப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது,” என்று அமெரிக்க-தென்கொரியப் படைகள் தளபத்தியம் தெரிவித்தது.