6,000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்தது
பூசன்: நியூசிலாந்தில் இருந்து சீனாவிற்கு 5,867 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
‘தி கல்ஃப் லைவ்ஸ்டாக் 1’ என்ற அக்கப்பல் கடந்த மாதம் 14ஆம் தேதி நியூசிலாந்தின் நேப்பியரில் இருந்து கிளம்பியது. 17 நாட்கள் பயணம் செய்து சீனாவின் ஜின்டாங் துறைமுகத்தை அடைய அது திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிழக்கு சீனக் கடல் பகுதியில் இருந்தபோது, மேசக் சூறாவளி அக்கப்பலை அலைக்கழித்தது. இதையடுத்து, உதவி கோரி அழைப்பு வர, ஜப்பானிய கடற்படை அப்பகுதிக்கு விரைந்தது.
கடலில் தத்தளித்தபடி இருந்த சரெனோ எட்வரொடோ எனும் 45 வயது பிலிப்பீன்ஸ் ஊழியர் மீட்கப் பட்டார். அக்கப்பலில் பணியாற்றிய மற்ற 42 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.
இயந்திரம் செயலிழந்துவிட்ட நிலையில், பேரலை ஒன்று தாக்கியதும் கப்பல் கவிழ்ந்துவிட்டதாக திரு எடுவரொடோ கூறினார்.
கப்பலில் பிலிப்பீன்ஸ் நாட்டவர் 39 பேரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த தலா இருவரும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பேரலைகளுக்கும் பலத்த காற்றுக்கும் இடையில் விமானங்கள், சுற்றுக்காவல் படகுகள் மூலமாகத் தேடும் பணி தொடர்கிறது.