பெய்ஜிங்: சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுக் குறுக்கீடுகளை சீனா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன மக்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்க முயற்சி செய்வோரின் எண்ணம் நிறைவேறாது என்றார் அவர்.
70க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சீனாவில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு மிரட்டல் விடுப்பவர்களை அவர் சாடினார்். அண்மைய காலமாக சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறது.
இருப்பினும், தமது உரையின்போது அமெரிக்காவை அதிபர் ஸி நேரடியாக தாக்கவில்லை.
ஆனாலும் வர்த்தகம், தொழில்நுட்பம், தென் சீனக் கடல் ஆகியவை தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் சீன ஊடகத்துக்கும் அதிகாரிகளுக்கும் அதிபர் ஸியின் உரை ஊக்குவிப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிரான வெளிநாட்டுக் குறுக்கீடுகளுக்கு சீனாவின் கடுமையான எதிர்ப்பை அதிபர் ஸியின் உரை பிரதிபலித்தது.
சில மாதங்களாக சீன கம்யூனிஸ்ட் கட்சியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கு சீன அரசதந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே சீனாவைத் தூண்டுவதாக நார்வே, செக் குடியரசு போன்ற நாடுகளை அவர்கள் குறைகூறியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வெளி
நாடுகளின் மூர்க்கத்தனமான குறுக்கீடுகளை முறியடிக்க முடியும் என்று சீனத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சீன-ஜப்பான் உறவு குறித்தும் அதிபர் ஸி பேசினார். அண்டை நாடுகளான சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நீடித்து நிலைத்திருக்கும் அமைதி யான நல்லுறவைத் தொடர்வது முக்கியம் என்றார் அவர். அது இருநாட்டு மக்களுக்கும் நன்மையைத் தரும் என்று அவர் தெரிவித்தார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததை அனுசரிக்க நடத்தப்பட்ட நிகழ்ச்சி யில் அதிபர் ஸி கலந்துகொண்டார். போரில் சண்டையிட்ட சீன ராணுவ வீரர்களுக்கு அவர் வீரவணக்கம் செலுத்தினார்.
போரில் சீனா வெற்றி பெற சீனாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த சீனர்களின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானை எதிர்த்துப் போரிட சீனாவுக்கு உதவிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் உலகெங்கும் உள்ள நண்பர்களுக்கும் அதிபர் ஸி தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

