துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் விற்கும் நோக்கத்துடன் அவற்றை வைத்திருந்த சிங்கப்பூரர் ஒருவரும் இந்தோனீசியர் ஒருவரும் பேங்காக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிங் என்ற 26 வயது சிங்கப்பூரரும் அய்டன் என்ற 32 வயது இந்தோனீசியரும் ஹுவே குவாங் மாவட்டத்திலுள்ள கூட்டுரிமை வீடு ஒன்றில் சிறப்புப் படை போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் செயல்பட்ட போலிசார் முதலில் இவர்கள் இருவரில் ஒருவருக்குச் சொந்தமான மெர்சடிஸ் பென்ஸ் காரைச் சோதனை செய்தனர். கார் உண்மையான மெர்சடிஸ் என்றாலும் அதன் பதிவு எண் போலியானது எனப் பின்னர் அறியப்பட்டது.
ஏழு கைத்துப்பாக்கிகள், 584 தோட்டாக்கள், ஒரு M67 கையெறி குண்டு, ஒரு KM18 கன்னி வெடிகுண்டு ஆகியவற்றைக் கண்டுபிடித்த போலிசார் அவற்றைப் பறிமுதல் செய்தனர் . லைன் மற்றும் வீசேட் செயலிகள் வழியாக துப்பாக்கிகளையும் வெடிபொருட்களையும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் விற்றதாக சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டனர்.
கைதிற்குப் பிறகு, சிங்கப்பூரிலுள்ள வாடிக்கையாளர் ஒருவர் பிங்கின் தொலைபேசியை அழைத்து தமது துப்பாக்கியை 100,000 பாட் (4,350 வெள்ளி) கட்டணத்திற்காக அழிக்கும்படி கேட்டுக்கொண்டதாக போலிசாருக்குத் தெரியவந்துள்ளது. இவ்விருவரும் 2019ஆம் ஆண்டில் மாணவர் விசாவைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளன.