டாக்கா: பங்ளாதேஷில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பின் காரணமாக குறைந்தது 12 பேர் மாண்டனர்.
பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை நாராயன்கஞ் மாநிலத்தில் உள்ள அந்தப் பள்ளிவாசலில் தொழுகைக்காக பலர் கூடியபோது வெடிப்பு நிகழ்ந்தது. எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவ்விடத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் அதையடுத்து குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிலிருந்து எரிவாயு கசிந்திருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
"கசிந்த எரிவாயு பள்ளிவாசலுக்குள் நுழைந்தது. பள்ளிவாசலில் தொழுகைக்காக கூடியவர்கள் கதவுகளையும் சன்னல்களையும் மூடிவிட்டு குளிர்சாதனப் பெட்டியைத் தட்டிவிட்டபோது அதிலிருந்து தீப்பொறி கிளம்பியது. இதனால் வெடிப்பு ஏற்பட்டது," என்று
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் நாராயன்கஞ் மாநில தீயணைப்புப் படைத் தலைவர் அப்துல்லா அல் அரிஃபின் தெரிவித்தார்.
கடுமையான தீக்காயங்களுடன் 37 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களில் மாண்ட 12 பேரும் அடங்குவர்.
பாதிக்கப்பட்டோர் உடல்களில் 70 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடு வரை தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை பேச்சாளர் கூறினார்.
வெடிப்பின் காரணமாக குறைந்தது 45 பேர் காயமுற்றதாக
பங்ளாதேஷ் போலிசார் தெரிவித்தனர். வெடிப்புக்கு முன்பு அந்த வட்டாரத்தில் எரிவாயு வாடை இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்
தனர். பங்ளாதேஷில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டுமானத் துறையினர் அடிக்கடி மீறுவதாக அதிகாரிகள் குறைகூறுகின்றனர். தீச்சம்பங்கள் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் அந்நாட்டில் நூற்றுக்
கணக்கானோர் மடிவதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைநகர் டாக்காவில் உள்ள பழைய கட்டடத்தில் தீச்சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, 78 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரு மாதம் கழித்து, டாக்காவில் உள்ள அலுவலகக் கட்டடம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது. அதில் 25 பேர் மாண்டனர்.

