சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேர்தல் பணியின்போது காயமடையும் தேர்தல் பணியாளர்களுக்கும் இறந்துபோகும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
"தேர்தல் பணியில் இருக்கும் மத்திய ஆயுதப்படை வீரர் மற்றும் பணியாளர்கள் கொவிட்-19 நோயினால் மரணமடைய நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீட்டை வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய கோரிக்கைகள் வரப்பெற்றன.
"எனவே தேர்தல் பணியில் ஈடுபடும்போது கொவிட-19 கிருமித்தொற்றால் உயிரிழக்கும் ஆயுதப்படை வீரர்கள் உட்பட அனைத்து தேர்தல் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது," என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் போது எதிர்பாராத விதமாக சமூக விரோதிகள், பயங்கரவாதிகளால் நிகழும் வெடிகுண்டு சம்பவங்கள், ஆயுதத் தாக்குதல் போன்ற வன்முறையில் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு இந்த தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொவிட்-19 நோயினால் ஏற்படும் இறப்பையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அதற்கேற்ற வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

