வாஷிங்டன்: கொரோனா கிருமித்தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் சாத்தியத்தில் அதிபர் டிரம்ப்பின் வாக்குறுதியை மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் (படம்) கூறியுள்ளார்.
கொள்ளைநோய் தொடர்பிலான நிபுணத்துவ கருத்துகளை அடக்கி ஒடுக்குவதில் டிரம்ப் கைதேர்ந்தவர் எனக் கூறிய திருவாட்டி கமலா, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் விவகாரத்திலும் அவரது நடவடிக்கை தொடரலாம் என தாம் கவலைப்படுவதாகத் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் கிருமித்தொற்று விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப் போவதாக திரு டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன் தொடர்பில் திருவாட்டி கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியை சிஎன்என் தொலைக்காட்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பியது.
"டோனல்ட் டிரம்ப்பை நம்பமாட்டேன்," என்று அவர் அந்த பேட்டியில் திட்டவட்டமாகக் கூறினார். தடுப்பு மருந்தின் ஆற்றல் குறித்து நம்பத்தகுந்த யாரேனும் ஒருவர் உறுதி அளித்தால் மட்டுமே அது குறித்து தாம் சமாதானம் அடையப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

