மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விக்டோரியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாவது நாளாக தொடர்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார விதிமுறைகளை மீறியதாக 176 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடமான குயின் விக்டோரியா சந்தையில் பழம் மற்றும் காய்கறி கடைகள் வழியாக ஆர்ப்பாட்டக் குழு ஒன்று அணிவகுத்துச் சென்றது.
அப்போது அவர்கள் போலிஸ்காரர்கள் மீது பழங்களை வீசுவது தொலைக்காட்சி ஒன்றின் கேமராவில் பதிவாகியுள்ளது.சுமார் 200 முதல் 250 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக போலிசார் தெரிவித்தனர்.சனிக்கிழமையன்று ஆங்காங்கே நடந்த சிறிய பேரணிகளில் 14 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆஸ்திரேலியாவின் கிருமித்தொற்று மையமாக விளங்கிய விக்டோரியாவில் தினசரி தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இன்று முதல் அங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டு வரப்படவுள்ளன.
இதன்படி ஒருநாளைக்கு மக்கள் வெளியில் இரண்டு மணி நேரம் அதிகம் செலவிட முடியும். மற்றும் இரவு நேரக் கட்டுப்பாடு ஒரு மணி நேரம் குறையும் என்றார் விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ்.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஒரே நாளில் 700 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில், அங்கு ஆறு வாரங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து தொற்று சம்பவங்கள் அங்கு குறையத் தொடங்கின. நேற்று புதிதாக 41 பேர் தொற்றுக்கு ஆளாகினர், ஏழு பேர் மாண்டனர்.

