கொவிட்-19 தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் முற்றிலுமாக நிறைவடைவதற்கு முன்பாகவே ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கி, அதன் மூலம உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது சீனா.
சீனாவில் தயாராகிவரும் கொரோனா கிருமித் தடுப்பு மருந்து நவம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயாராகக்கூடும் என அந்நாட்டு தொற்று நோய் கட்டுப்பாட்டு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
நான்கு விதமான தடுப்பு மருந்தை சீனா பரிசோதித்து வருகிறது. அந்தப் பரிசோதனை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது. இவற்றில் மூன்று தடுப்பு மருந்து ஏற்கெனவே அத்தியாவசியப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரநிலைப் பயன்பாட்டுத் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு அந்தத் தடுப்பு மருந்து தரப்பட்டு வருகிறது.
மூன்றாம் கட்ட, இறுதிப் பரிசோதனை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் நவம்பர் அல்லது டிசம்பரில் பரிசோதனை நிறைவுபெற்று பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தை வழங்கும் சாத்தியம் உள்ளதாகவும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் உயிர்பாது காப்பு நிபுணர் குயிஜென் யூ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் திங்கட்கிழமை பங்கேற்றுப் பேசிய அந்தப் பெண்மணி, அண்மைக் காலமாக பரிசோதனை மூலம் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை என்றார்.
ஏப்ரல் மாதம் தமக்குத் தாமே அந்த மருந்தை செலுத்தியதாகவும் நான்கு தடுப்பு மருந்தில் எந்த மருந்து தமது உடலில் செலுத்தப்பட்டது என நினைவில்லை என்றும் அவர் கூறினார்.
அத்தியாவசியப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மூன்றுவித தடுப்பு மருந்துகளையும் சீன தேசிய மருந்து தயாரிப்பு குழுமமும் (சினோஃபார்ம்) அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனப் பட்டியலில் உள்ள சினோவாக் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளன. அரசாங்கத்தின் அவசரநிலை பயன்பாட்டுத் திட்டத்தின்கீழ் இவை தயாரித்துப் பரிசோதிக்கப்பட்டன.
இதற்கு முன்னர் ஜூலை மாதம் சினோஃபார்ம் தெரிவிக்கையில் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுற்றதும் ஆண்டிறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்தது.
நான்காவது தடுப்பு மருந்தை கேன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் தயாரித்தது. சீன ராணுவத்தினருக்கு அந்த மருந்தை வழங்க ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.