ஜப்பானின் புதிய பிரதமராக 71 வயது யோஷிஹிடே சுகா அதிகாரபூர்வமாக தேர்வாகிஉள்ளார்.
கடந்த வாரம் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியில் நடைபெற்ற தலைவருக்கான போட்டியில் சுகா வெற்றி பெற்றார்.
இதையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் அவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய பிரதமர் சுகா, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.
உடல் நலக் குறைவு காரணமாக பதவி விலகுவதாகவும் திரு அபே கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரு அபே தமது அமைச்சரவையின் கடைசி கூட்டத்தை புதன்கிழமை அன்று கூட்டியிருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது எட்டு ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளுக்காக பெருமைப்படு வதாகக் கூறினார்.
இதற்கிடையே ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியில் திரு சுகா எதிர்பார்த்தபடியே பிரதமராகத் தேர்வு பெற்றுள்ளார்.
ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் போதுமான உறுப்பினர்கள் இருப்பதே அதற்கு காரணம்.
திரு சுகாவுக்கு ஆதரவாக 462 வாக்குகளும் எதிராக 314 வாக்குகளும் பதிவாகின.
ஜப்பானின் பழுத்த அரசியல்வாதியான திரு சுகா, அமைச்சரவையில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளார்.
முக்கிய அமைச்சர் பொறுப்புகளை அவர் வகித்து வந்துள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழ்நிலையில் பிரதமர் பொறுப்பை ஏற்கும் சுகாவுக்கு நாட்டின் பொருளியலை மீட்டெடுக்க வேண்டிய சவால்மிக்க பணி உள்ளது.
மற்ற நாடுகளைப் போலவே ஜப்பானும் கொவிட்-19க்கு எதிராகப் போராடி வருகிறது. நாட்டில் மூப்படையும் மக்கள் தொகையையும் சமாளிக்க வேண்டியுள்ளது. ஜப்பானில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மக்கள் 65 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.