மியன்மாரின் ரோகின் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டில் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மியன்மாரை ஐக்கிய நாடுகள் அமைப்பு நெருக்கி வருகிறது.
அதனையடுத்து அந்நாட்டின் ராணுவம், இது குறித்து பரந்த நோக்கில் எல்லாக் கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளது.
2017ல் ரோஹிங்யா மக்கள் கொத்துக்கொத்தாக சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் தங்கள் சொந்த நாட்டில் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாக்க அண்டை நாடான பங்ளாதேஷுக்கு அவர்கள் அடைக்கலம் தேடிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. சுமார் 730,000 பேருக்கும் அதிகமான ரோஹிங்யா மக்கள் பங்ளாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். இனப்படுகொலையில் ஈடுபட்டதை மியன்மார் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
ரோஹிங்யா தீவிரவாதிகளுக்கு எதிராக முறையான நடவடிக்கையையே ராணுவம் மேற்கொண்டது என்றும் அது வலியுறுத்துகிறது.
இருப்பினும் சில கிராமங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் அனைத்துக் கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்தது.
குற்றவாளிகள் பற்றிய விவரங்களையும் அவர்களின் குற்றங்கள் பற்றியும் ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. ரோஹிங்யா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவம் குறித்த புகார் தொடர்பாக பல கோணங்களில் விசாரிக்கப்படுவதாக ராணுவம் கூறியிருப்பது இதுவே முதல்முறை.