அமெரிக்காவின் தெற்கு வளைகுடாப் பகுதியை தாக்கிய சேலி சூறாவளியாலும் அதன்பின் கொட்டித் தீர்த்த கனமழையாலும் 550,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
இரண்டாம் நிலை சூறாவளியாக நேற்று அமெரிக்காவின் தெற்குக் கரையைத் தாக்கிய சேலி, மெதுவாக நகர்ந்து சென்று தற்பொழுது ஃபுளோரிடா, அலபாமா மாநிலங்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
சேலி சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக உள்ளன என்றும் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஃபுளோரிடாவின் பான்சகோலா என்ற பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பே எனப் பெயர் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டதாகவும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
“உயிருக்கு ஆபத்தானதாகவும் பேரிடர் போலவும் வெள்ளப் பெருக்கால் ஃபுளோரிடா மாநிலத்தின் பேன்ஹேண்டல் பகுதியும் அலபாமா மாநிலமும் தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன,” என்று அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் விவரித்துள்ளது.
“இந்தச் சூறாவளியில் நான்கு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை நான்கே மணி நேரத்தில் பொழிந்து தள்ளிவிட்டது,” என்று பான்சகோலா தீயணைப்புப் படையின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் சிஎன்என் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
அலபாமா மாநிலம், ஆரஞ்சு பீச் நகரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் மேலும் ஒருவரைக் காணவில்லை என்றும் அந்நகர மேயர் கூறினார்.