மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புக்கு எதிராக முகமது ஹைரூல் என்ற வழக்கறிஞர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அன்வார் இப்ராகிமும் மலேசிய கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வழங்கும் வாரியமும் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு வழக்கறிஞர் என்ற முறையிலும் பொதுமக்களில் ஒருவர் என்ற முறையிலும் திரு முகமது ஹைரூலுக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்ய முழுத் தகுதி உள்ளதாக நீதிபதி அக்தர் தாஹிர் கூறினார். மேலும், மலேசிய மன்னர் மன்னிப்பு வழங்கும்போது நிர்வாகப் பணி ஒன்றை மேற்கொண்டார் என்றும் அதற்கென சில சட்டங்களும் நடைமுறைகளும் உள்ளன என்றும் கூறிய நீதிபதி, நிர்வாக அதிகாரங்களை ஒருவர் பயன்படுத்தும்போது அது குறித்து கேள்வி எழுப்பலாம் என்று அவர் தெரிவித்தார்.
“நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்ட பிரச்சினையாக இது இருப்பதால் இதை நீதிமன்றத்தில் ஏன் விசாரிக்கக்கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் விசாரணைக்கு உட்பட்ட பல அம்சங்கள் உள்ளதால் இந்த வழக்கு முழு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆகையால், இதை முழு விசாரணைக்கு முந்தைய இந்த நிலையில் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று தமது தீர்ப்பில் கூறினார். தொடர்ந்து பேசிய நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் செய்த இந்த மனுக்களை நான் தள்ளுபடி செய்கிறேன் என்று கூறினார்.
பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் 2021 பிப்ரவரி 18ல் இடம்பெறும் என்றும் வழக்கு விசாரணை மார்ச் 24 - 26ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறினார்.