மியன்மாரின் பெரிய நகரமான யங்கூனிலும் அதைச் சுற்றிஉள்ள வட்டாரங்களிலும் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
அதனையடுத்து அங்கு கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை அந்நாடு வரும் நவம்பர் 8ஆம் தேதி எதிர்நோக்கஉள்ளது இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக குடும்பத்தில் ஒருவர் கடைத்தெருவுக்குச் செல்லலாம். அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வங்கி, மருத்துவமனை, எரிவாயு நிலையங்கள், உணவங்காடிகள் ஆகியவை வழக்கம்போல் செயல்படலாம். இதுகுறித்து அந்நாட்டின் கொவிட்-19 கட்டுப்பாட்டுக் குழு வழிகாட்டிக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை சுழற்சி முறையில் வீட்டில் இருந்து பணிசெய்யச் சொல்லுமாறு அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது. அதையே அரசாங்க ஊழியர்களும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிய நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் இச்சூழலில், தனிமைப்படுத்திக்கொள்வதற்கு இரண்டு வாரம் தேவையில்லை. ஒரு வார காலம் போதும் என்று மியன்மார் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் அந்நாட்டில் புதிதாக 671 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 54 மில்லியன் பேரைக் கொண்டுள்ள மியன்மாரில் முதன்முதலாக மார்ச் மாத இறுதியில் கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு இதுவரை மொத்தம் 5,805 பேர் பாதிக்கப்பட்டனர். 94 பேர் கொவிட்-19க்குப் பலியாகி விட்டனர்.