கொவிட்-19 கிருமித்தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 200,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகிவிட்டன. கொள்ளைநோய் ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிருமித்தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திடும் என்று ஒரு காலத்தில் நினைத்துக்கூட பார்த்திராத ஒரு மைல்கல். கிருமியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க தலைமைத்துவம் தோற்றுவிட்டதே இதிலிருந்து தெரிவதாக நிபுணர்கள் சுட்டினர்.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. வெளிப்புற ஒன்றுகூடல்களும் அனுமதிக்கப்படும் நிலையில் கிருமித்தொற்று உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
“கொவிட் கிருமியால் கொல்லப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கரின் இறப்பும் சோகத்திற்குரியது. பெரும்பாலான உயிரிழப்புகள் நடக்காமல் தடுத்திருக்கலாம்,” என்றார் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் முன்னாள் இயக்குநர் டாம் ஃபிரைடன்.
“கதைகளில் வருவது போல் இதற்கு ஒரு நல்ல முடிவு இருப்பதாகத் தெரியவில்லை. தடுப்பூசி மருந்தும் இல்லை,” என்று அவர் டுவிட்டரில் பதிவு செய்தார்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைத் தொடர்வது, உத்திபூர்வமாகச் செயல்பட்டு சோதனை செய்வது, உடனே தனிமைப்படுத்துவது, தொடர்புகளின் தடங்களை முழுமையாக அடையாளம் காண்பது போன்றவற்றைக் கடைப்பிடித்து உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காக்குமாறு அவருடன் இன்னும் பல நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனைத் தாண்டிவிட்டது.