கொவிட்-19 தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டுள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து ஒரு ‘டோசி’லேயே (dose) கொரோனாகிருமிக்கு எதிராக வலுவான நோய்த்தடுப்பு ஆற்றலை உருவாக்கி இருப்பதாக நேற்று வெளியிடப்பட்ட இடைக்கால ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Ad26.COV2.S என அழைக்கப்படும் அந்தத் தடுப்பு மருந்தின் இரு வேறு ‘டோஸ்’கள் நல்ல முடிவுகளை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மருதின் ஒரு ‘டோஸ்’ குரங்குகளுக்கு அளித்து பரிசோதிக்கப்பட்டதில் வலுவான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சுகாதாரமான 1,000 பேருக்கு பரிசோதனை அடிப்படையில் மருந்து வழங்கப்பட்டது.
இந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், 60,000 பேருக்கு கடந்த புதன்கிழமையிலிருந்து இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் சாதகமாக இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதற்கான விதிமுறை அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படும்.
இந்த மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும்.
இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு 29 நாட்களுக்குப் பிறகும்கூட, மருந்தைப் பெற்றுக்கொண்ட 98 விழுக்காட்டினரின் உடலில் கொரோனாகிருமியை சமன்படுத்தும் ஆன்டிபாடிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 36 விழுக்காட்டினருக்கு அசதி, உடல் வலி போன்ற பக்க விளைவுகள் இருந்தன. 65 வயதுக்குட்பட்டவர்களில் 64 விழுக்காட்டினருக்கு அந்தப் பக்க விளைவுகள் இருந்தன.
ஆனால், இளம் வயதினரைப் போலவே முதியவர்களுக்கும் இந்த மருந்து உரிய தடுப்பு சக்தி வழங்குமா என்பது தெரியவில்லை.
தற்போது அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு செலுத்திப் பரிசோதிப்பதன் மூலம் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது ஆராயப்படும்.
இந்த ஆய்வு முடிவுகள் medRxiv எனும் மருத்துவ இணையப்பக்கத்தில் வெளியாகியுள்ளது.