இந்தியாவில் கொரோனா கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை ஆறு மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு கிருமிப் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது.
அந்நாட்டில் நேற்று 82,170 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 6,074,703 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 74,893 பேர் இந்நோயிலிருந்து மீண்டனர் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தற்போது நாடு முழுவதும் 962,640 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை 5,016,521 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. அங்கு இதுவரை மொத்தம் 95,542 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில், ஏழு மில்லியன் தொற்று சம்பங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கிருமித்தொற்று இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணியுமாறு நேற்று மக்களை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
“கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தக் கட்டுப்பாடுகளே, ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றும் முக்கிய ஆயுதங்கள்,” என்றார்.
தொடக்கத்தில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் தாக்கிய கிருமி, பின்னர் மற்றப் பகுதிகளிலும் கிராமங்களிலும் பரவியது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கையும் கட்டுப்பாடுகளையும் விதித்த முதல் நாடுகளில் ஒன்று இந்தியா. பொருளாதார வீழ்ச்சியையும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் சமாளிக்க இம்மாதத் தொடக்கத்திலிருந்து படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தியது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ரயில்கள், பேருந்து சேவைகள் தொடங்கிவிட்டன. சுற்றுப் பயணங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) சமூக மருத்துவ பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் கூறினார். “தொற்று சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ளது,” என்று அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.
“இந்நிலையில், செய்யக்கூடிய ஒரே விஷயம், நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதும் கிருமித்தொற்று உள்ளோரை விரைந்து அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதுதான். சமூக பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.